சேதி கேட்டவர்கள் எல்லோரும் தெருவில் ஓடிக் கொண்டிருந்தார்கள். நான் புரியாமல் திகைத்து நின்றேன்.
இந்த சிற்றூரில் இருப்பதோ ஏழெட்டு தெருக்கள் தான்.
“ஏகாம்பரம்! என்ன சேதி? ஊருசனம் மூச்சூடும் இந்த ஓட்டம் ஓடுதே?”
தலைச்சுமையை போட்டு விட்டு நின்ற அவனிடம் கேட்டேன்.
“சாமி குடியானவத் தெருமுக்கு வூட்டுல வண்டிக்கார பழனி வியாபாரத்துக்கு போன இடத்துல மாரடைப்பு வந்து செத்துட்டாக. வண்டில எடுத்திட்டு வந்திருக்காங்க”. என்றான் சும்மாடை உதறிக் கொண்டே.
“அடடா! புள்ள குட்டிக்காரனாச்சே ! பொஞ்சாதியும் சின்னசிறிசு! வூட்டை விட்டு போட்டு வெளியே வந்தா, வழிதெரியாது அந்தப் புள்ளைக்கு! சரி நீ வூட்டை பாத்துக்க போய்ப் பார்த்துப் போட்டு வர்றேன்”.
முக்கு தெருவை நோக்கி நடந்தேன்.
பழனியின் உடல் அவன் வூட்டு முற்றத்தில் கிடத்தப்பட்டிருந்தது.
கதறலும், அழுகுரலுமாக அந்த இடம் சோகத்தில் மூழ்கியிருந்தது. அவன் மனைவி அம்மணிப்பொண்ணு, பழனியின் உடம்பின் மீது விழுந்து கதறிக் கொண்டிருந்தாள். குஞ்சும் குளுவானுமாக நாலு பிஞ்சுகளும் தாய் அழுவதை கண்டு இனம் புரியாமல் பிரமித்திருந்தன.
அப்போதுதான் அந்தப் பெண்ணைக் கண்டேன்.
மாந்தளீர் நிறத்தில் களையான முகத்தோடு இருபத்தெட்டு வயதுக்கு மேற்படாத அந்தப் பெண், அம்மணிப் பொண்ணை அணைத்துக்கொண்டு கதறிக் கொண்டிருந்தாள்.
“என்ர மவராசா!... எங்களை அநாதையாக்கிப்புட்டு போயிட்டீங்களே! எங்கொறையை யாருகிட்டே சொல்லி யழுவேன் என் ராசா...” அவளது கதறலும் அழுகையும் நெஞ்சை பிழிந்தது.
மெல்ல வெளியே வந்தேன்.
“ஆருங்க இந்த புள்ளே , புதுசா இருக்கு?” என்றேன் இறங்கிய குரலில், என்னருகே நின்ற ராமசாமியிடம்.
“கொஞ்ச முன்னதான் எனக்கும் விவர தெரிஞ்சுது! சந்தை யாவாரம் தானே பழனிக்கு ! போற எடத்துல பழக்கமாகி இந்த புள்ள கூட தொடுப்பாம்! பேரு பாப்பாத்தியாம்! செத்துப் போனவனை தனியா அதுதான் வண்டியிலே ஏத்திட்டு வந்து வூடு கொண்டாந்து சேர்த்தது” என்றாள் மெல்ல.
“அம்மணிக்கு இந்த விஷயம் தெரியுமா” என்றேன்.
“நீ ஒண்ணு ! அது ஒரு வெள்ளைச்சோளம்! இதெல்லாம் தெரியாது. பழனி அந்த விஷயத்திலே ரொம்ப அழுத்தக்காரன்! கல்யாணத்துக்கப்புறம்தான் தொடுப்புன்னு நினைக்கிறீங்களா?”
“பின்னே”
“அதான் இல்லே! கல்யாணத்துக்கு முந்தியே பழக்கமாம்! இதை லேசுபாசா பெத்தவங்க தெரிஞ்சுட்டுத் தான் பழனிக்கு மொறைப் பொண்ணை இழுத்து வெச்சு கட்டி வச்சாங்க”
“அந்தப் பாப்பாத்தி....தன்னைக் கைவுட்டுட்டு அவன் வேற பொண்ண கல்யாணம் செய்துக்க எப்படி சம்மதிச்சுச்சு”
“வீட்டுப் பெரியவங்க விரும்பலேங்கறது தெரிஞ்சதும், முறைப் பொண்ணையே கட்டிக்கச் சொல்லி அதுதான் கட்டாயப்படுத்துச்சாம்! பழனிக்கு துளியும் இஷ்டமில்லையாம்!”
வியப்போடு அவனைப் பார்த்தேன்.
அவளோட அலாதியான அந்த குணத்தாலே தான் பாப்பாத்தியப் பிரிய மனமில்லாம பிசினா ஒட்டிக்கிட்டான்.
“நீயென்ன சொல்றே” என்று அவன் முகத்தைப் பார்த்தேன்.
“அவ சொன்ன மாதிரி மொறைப்பொண்ணை கட்டிக்கிட்டான்! ஆனா விரும்பினவளைக் கைகழுவ மனசு ஒப்பாமே, அந்த பாப்பாத்தியையும் பொஞ்சாதியாகிட்டான், நடுவூட்டு தாலிகட்டி.
அம்மணி பொண்ணுக்கு இன்னவரைக்கும் இந்த விவரம் தெரியாது. கொஞ்சமின்னே தான் இந்தப் பாப்பாத்தியப் பார்த்து திகைச்சது, பழனிக்கு இப்பிடியொரு தொடுப்பு இருக்கானு.
நாங்கள் பேசிக் கொண்டிருக்கும்போது, பரபரப்பாக வெளியே வந்து எட்டிப் பார்த்தாள் பாப்பாத்தி.
அழுதழுது வீங்கி சிவந்த முகத்தில் கண்ணீரின் ஈரத்தில் கேச கற்றைகள் கன்னத்தில் ஒட்டி இருந்தன.
அவள் என்னை நோக்கி வந்தாள்.
“அய்யா அவுகளைக் கரையேத்தனும் காரியத்துக்கு செலவு செய்ய அந்த புள்ள கிட்ட காசில்லே! அது ஒரு அப்புராணி சென்மமுங்க!. அய்யா! பெரிய மனசு பண்ணி ஒரு ஒதவி செய்யோணுமுங்க !” என்று இறங்கிய குரலில் கேட்ட அவளை பார்த்தேன்.
சட்டென்று கழுத்து அட்டியலை கழற்றினாள்.
“இந்த அட்டியலை வித்துக்குடுங்கனுங்க. சாயங்காலத்துக்குள்ள அவுகள காட்டுக்கு அனுப்பி வைக்கணுங்க” என்றவள் பொங்கி வந்த கண்ணீரை சேலை முந்தானையால் துடைத்துக் கொண்டாள்.
அவள் நீட்டிய அட்டியலை வாங்கி பார்த்தேன்.
நாலு பவுன் இருக்கலாம்.
“அடகு வெக்கலாமே” என்றேன்.
“இல்லீங்க சாமி காட்டு செலவு, காரிய செலவு, ஏகப்பட்ட செலவு இருக்குதுங்களே. வவுத்துப்பாடு வேறே! பணம் மிஞ்சினா அதிலேதான் யாவாரம் செய்யணுமுங்க அடமான வச்சாக்கா திருப்ப முடியாது வட்டியும் கட்ட முடியாது. “
. இடிந்து போன அந்த நிலையிலும் அடுத்து நடக்க வேண்டிய காரியங்களை பற்றி தீர்க்கமாக முடிவெடுத்து செயல்பட்ட அந்தப் பெண்ணை பார்த்தபோது அவள் மீது புதியதோர் மரியாதையும் மதிப்பும் ஏற்பட்டது.
அடுத்து நடக்க வேண்டிய காரியங்கள் மளமளவென்று நடந்தேறின.
எடுத்து செய்ய ஆளில்லாத அந்த வீட்டில், ஒரு ஆம்பளையைப் போல் முடிவெடுத்து காரியமாற்றினால் பாப்பாத்தி.
காரியம் முடிந்தபின் மாட்டு வண்டியில் ஏறி அமர்ந்த பாப்பாத்தியை கண்டு மலைத்துப் போனேன்.
வெற்று கழுத்தும், மூளியான உடம்புமாய், குங்குமம் இழந்த நெற்றியோடு பளீரென்ற வெள்ளை புடவையில் காட்சி தந்த அவளைக் கண்டு திகைத்துப் போனேன்.
என்னைக் கண்ட அவள் தயங்கினாள்.
“அய்யா, கும்புடறேங்க! அவங்க செஞ்சுட்டிருந்த சந்தை யாவாரத்தையே இப்ப நானும் செய்யப்போறேங்க ! என்ர சக்களத்திக்கு ஒரு மண்ணும் தெரியாதுங்க. இந்த புள்ளைங்களை வளர்த்துக் கரையேத்தணுங்களே. துக்கம்னு மூலையிலே மொடங்கினா... புள்ளைங்க பசியை ஆருங்க ஆத்தறது? அதான்” என்றவாறே வண்டியில் ஏறினாள் பாப்பாத்தி.
“சின்ன வீடு” ஊர் உலகத்தில் குடும்பத்தை குட்டிசுவராக்கும், பணத்தை கரைக்கும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.
ஆனால்...
“பெரிய வீட்டின் முற்றுப் பெறாத கடமைகளை நிறைவேற்ற சின்ன வீடு தன்னை மெழுகாய் உருக்கிக் கொள்ளும் அதிசயத்தை இப்போதுதான் பார்க்கிறேன்.
குங்குமம் ஜனவரி 1993.

.jpg)
No comments:
Post a Comment