Appu Movies

Monday, July 6, 2026

விடியலை நோக்கி சில விழிகள் - எழுதியவர் மறைந்த எழுத்தாளர் கே. ஜெய்புன்னிசா

July 06, 2026 0
விடியலை நோக்கி சில விழிகள் - எழுதியவர் மறைந்த எழுத்தாளர் கே. ஜெய்புன்னிசா


 விளக்கேற்றும் நேரம்! 


  மெல்ல மெல்ல இருள் கவிந்து கொண்டிருந்த அந்திப்பொழுது. 


  சில்லென்ற காற்றோடு ஊசி முனியாய் மழைத்துளிகள் முற்றத்தில் தெறித்து விழுந்தன. 


  புகை படிந்த சிம்மினி விளக்குகளை துடைத்து விளக்கேற்றினாள் ஜானா. கூடமும் பூஜை அறையும் விளக்கொளியும் புதுக்கோலம் பூண்டன.


  அடுக்களையில் கை காரியமாய் இருந்த மூத்தவள் வேதா ஊதுவத்திகளை கொளுத்தி வந்து பூஜை அறையில் வைத்தாள். 


  அந்த மழை நேரத்தில் கூட இரண்டாம் முறையாக சில்லென்ற கிணற்று நீரில் நீராடி விட்டு வந்த அலமு, பூஜை அறை என்ற பெயரில் இருந்த அந்த இருண்ட சாமி உள்ளின் முன் விழி மூடி கரங்குவித்து நின்றாள்.


  கணிரென்ற  குரலில் துல்லியமாய் லயத்தோடு மகாலட்சுமி அஷ்டகத்தை ஜபித்துக் கொண்டிருந்தன அலமுவின் உதடுகள்.


“நமஸ்தோஸ்து மகாமாயே.....”


சூதானமாக இழைந்து வந்தது நாதம். 


  நீண்ட நேரம் கரங்குவித்து வணங்கி நின்ற அலமுவின் விழியோரங்களிலிருந்து நீர் முத்துக்கள் உருண்டன.


  அம்மன் குங்குமத்தை எடுத்து பத்தி சிரத்தையோடு நெற்றிக்கு இட்டுக் கொண்டவள், சிறிதை மாங்கல்யத்திலும் வைத்து அதனை கண்களில் ஒற்றிக் கொண்டாள்.


  கூடத்தில் முட்டை விளக்கின்  மங்கிய ஒளியில் அப்பளம் இட்டுக் கொண்டிருந்த பெரிய மகள் வேதாவை பார்த்ததும் அவள் இதயம் பெருமூச் செறிந்தது. இதயத்தின் ஜீவ நரம்பை சுண்டி விடுவது போல் ஒரு வேதனை மின்சாரமாய் பாய அம்மாவும் மகளுக்கு உதவியாய் அப்பளம் விடத் தொடங்கினாள். 


  “ஜானா எங்கடி?” வேதாவிடம் கேட்டாள் தாய் அலமு.


  “நம்மாத்துக் கொள்ளையிலே வெண்டையும், கத்திரியும் அமோகமா காய்ச்சதோன்னோ ?  ஆத்துக்கு போக மீந்தது வாடறத்துக்கு முன்னாடி வித்துபுடலாம்னு பங்கஜம் மாமிகிட்டே எடுத்துண்டு போனா.. வர்ற நேரம்தான்!”


“நீயும் தான் நெதமும் அப்பளத்துக்கு இடிச்சு, உழைச்சு, ஓடாத் தேயறே! ஜானாவோ பொழுது விடிஞ்சு போனா கொல்லையே கதின்னு கெடக்கறா.  கொத்தறதும், ஜலம் இழுத்து கொட்டறதும்ன்னு ஒவ்வொரு பூவும் பிஞ்சுமா மொட்டு விடறதைப் பார்த்து பாத்து வளர்த்து அப்பப்போ காசாக்கறா.   என்னதான் நீங்க ரெண்டு பேரும் ஓடாத்தேய்ஞ்சு மாஞ்சு போனாலும் நம்ம தரித்திரம் விடியறதைக் காணும்?  பொட்டக்கோழி கூவியா பொழுது விடிய போறது?”


  “எதுக்கும் அந்தக் கடவுள் அனுகிரக வேணும்டி.  இந்த பிராமணரோ எதையும் கண்டுக்காத தோத்திரம், பூஜை புனஸ்காரம்ன்னு  காலத்தை ஓட்டிண்டிருக்கார்.”


  மனப்புழக்கம் புலம்பலாய் வெடிக்க கொட்டி தீர்த்தாள் அலமு.


  “இதோ ஆச்சு...  தூறலோ, மழையோ, எதுவானா என்ன? உழைக்கும் கைகள் ஓய்வெடுக்கவா முடியும்? அரை மணி நேரத்துக்குள் கோரைப்பாயில் அப்பளங்கள் பச்சை மணம் வீச பூத்துப் பெருகின.


  ஈர காற்றின் குளிர்ச்சியோடு பச்சையப்பளத்தின் மனம் அந்த இரவு பொழுதில் நாசிக்கு இதமான வாசனையை வாரி தெளித்தது. 


  “அலமு இலை போடறியாடி?”


  “வாசத் திண்ணையிலிருந்த மண் முடாவிலிருந்து நீரை மொண்டு கை கால் அலம்பி கொண்டு வந்த குருக்கள் மனை பலகையில் போட்டுக்கொண்டு அமர்ந்தார்.


  “எல்லாமாச்சு. இதோ வந்துண்டே இருக்கேனா!?”


  அவரது இலையில் கல் சட்டியில் இருந்த பழையதை பிழிந்து போட்டு கடைந்த மோரை விட்டு மாவடுவை வைத்தாள். 


  “இன்னிக்கு தளிகை இல்லையாடி” என்று கேட்டவாறு சாதத்தை பிசைந்து ஒரு வாய் போட்டுக் கொண்டே...


“என்னதான் சொல்லு, அந்த மாவடுவோட ருசிக்கு ஈடு வேறேதும் இல்லை....!” ரசித்து உண்டவாறே அலமுவைப் பார்த்து புன்னகைத்தார் குருக்கள்.


  “மாவடுவையே ரசிச்சிண்டிருங்கோ! மாமரம் போல தலைக்கு மேல வளந்து நிக்கிற ஜானா, அவளை பத்தின கவலை ராப்பகலா என் நெஞ்ச எரிச்சுண்டிருக்கு.  அந்த மாயவரத்து பிள்ளையாண்டானோட ஜாதகம் நல்லா பொருந்தி இருக்கு. அவளுக்கும் நம்ம ஜானாவை பிடிச்சு போச்சு.  மேற்கொண்டு அவா கேக்கற சீர்வரிசையை எப்பாடுப் பட்டாவது செஞ்சுட்டோம்னா போறும்.  ஜாம் ஜாம்ன்னு கல்யாணம் நடந்திடும்.  பகவானே! எப்படியாவது ஜானா கழுத்துல சீக்கிரமா தாலி ஏறணும்...” அலமு கண்களை மூடி ஜெபித்தாள்.


  சாப்பிடுவதை நிறுத்திவிட்டு கட கடவென்று சிரித்தார் குருக்கள். 


“உனக்கு என்னடி பைத்தியமா? அவ கேக்கற சீர்வரிசையை இந்த ஜென்மத்துல நம்மால செய்ய முடியுமாடி! நான் என்ன கலெக்டர் உத்தியோகமா பாக்கறேன்.  ஏழை குருக்கள்டி இதுவோ நாட்டுப்புறம்.  மாசாமாசம் இருநூறு ரூபா கிடைப்பதே நம்ம அதிர்ஷ்டம். நாள் கிழமைகள்ல்லே தட்ல விழற  சில்லறை காசுகள் தான் விறகுக்கும், உப்பு புளிக்கும் உதவுவது என்கிறதை மறந்துடாதே.  ஏதோ கோயில்லே குடியிருக்க வீடு கொடுத்தாலே பொழைச்சோம். கொல்லையிலே காய்கிற காய்கறிகள் விக்கிற காசு தீபாவளிக்கு நாமும் புது துணி கட்டிக்க ஓதவுது.   இந்த லட்சணத்தில புக்காத்துக்குப் போன வேதாவை, அவ புருஷன் வேறொருத்தியைச் சேர்த்துண்டு நம்மாத்துக்கே திருப்பியனுப்பிட்டான்.  நம்ம குழந்தை நமக்கு சுமையாயிடுமா? எல்லாம் காலக் கோளாறு.  இந்த லட்சணத்திலே பெரிய இடத்துலே கொடுக்க ஆசைப்படறே.  எல்லாத்தாயும் படற நியாயமான ஆசைதான்! ஆனா நமக்கு வசதி வேண்டாமாடி? நெனச்சுப்பாரு” நிதானமாக பேசினார் குருக்கள்.


  “அப்படியொண்ணும் அதிகமா கேட்டுடலையே ஆவா? கையிலே கொஞ்சம் ரொக்கம். அஞ்சு சவரன்லே ஒரு ரெட்டை வடம் சங்கிலி போட்டு, காது மூக்க மூடினா போறும்னா.  நாலு எவர்சில்வர் பாத்திரம், வெள்ளி குங்குமச்சிமிழ் இவ்ளோதான்.  இந்த கிராமத்துலே நம்ம அம்பாள் சன்னதியில் கல்யாணம்.  ஒரு நூறு பேருக்கு சாப்பாடு இது செய்ய முடிஞ்சா போறும்.  நம்ம ஜானா கல்யாணம் ஜாம் ஜாம்முன்னு நடக்கும்!” 


  “ஏண்டி இப்படி பொலம்பின்டே இருக்கே ? மரம் வெச்சவன் தண்ணி ஊத்துவான்.  எல்லா பாரத்தையும் பகவான் கிட்ட இறக்கி வச்சிட்டு சிவனேனு இரேண்டி.”


  எந்த ஒரு பாதிப்பும் தன்னை அணுகாத நிச்சலமான  நிலையில் முற்றத்தில் துண்டை விரித்துப் படுத்துவிட்டார் குருக்கள்.


  அவரை துரத்திக் கொண்டே அங்கு வந்த தூணில் முதுகை சாய்ந்து அமர்ந்தாள் அலமு. 


  அவரிடம் புலம்பித் தீர்ப்பதிலும் ஒரு சுகானுபவம் அவளுக்கு இருக்கத்தான் செய்தது.  இறுக்கமாக சிக்கி, விழுந்த முடிச்சு தளர்ந்து கொஞ்சம் கொஞ்சமாக விலகி விரிவதுபோல் நெஞ்சை இடைவிடாமல் அறுத்துக் கொண்டிருக்கும் சுமைகளும் கவலைகளையும் கணவனிடம் வாய் திறந்து புலம்பும்போது விலகுவது போலிருந்தது.


  “லோகத்திலே பிள்ளையைப் பெத்தவா எல்லோரும் கிடைச்சவரை ஆதாயம்ன்னு  கறக்க தான் பார்ப்பான். இது உலக சம்பரதாயம் அதுக்கு சம்மதம்னா எப்படியாவது சீர்வரிசை கொடுத்து பொண்ணை கரையேத்தணும்.  பிள்ளையாண்டான் கை நிறைய சம்பாதிக்கிறச்சே பொண்ணு தானே அனுபவிப்பா. அப்போ சந்தோஷப்படற நாம இப்ப சிரமப்பட தான் வேணும். “


  பெருமூச்சு விட்டவாறு யோசனையிலாழ்ந்தார் குருக்கள். 


  “அவ கேட்கிற சீர்வரிசைக்கு ரொக்கத்திற்கும் நமக்குன்னு மிச்சம் இருக்கிற மஞ்ச காணி நிலத்தை வித்தா கூட போதாதே என்னடி பண்றது?”.


  “புள்ளையாண்டான் மத்திய அரசாங்கத்திலே உத்தியோகத்தில் இருக்கான் இந்த வரைக்கும் அவா பெருசா வைர மூக்குத்தி போடுன்னு சொல்லாம நம்ம குடும்ப பாரம்பரியத்தை அனுசரிச்சு இந்த ஏழை குருக்களாத்துக்கு பெண் பார்க்க வந்தது பெரிய விஷயம். “


  “நாம் என்ன யோசிச்சு என்னடி பண்ண ? வேலை வந்துடுத்துன்னா எல்லாம் நல்லபடி நடக்கும்....”


  “ஏன்னா நிஜமாத்தான் சொல்றேளா? நம்ம ஜானாவுக்கும் கல்யாணம் நடக்கும்ன்னு சொல்றேளா?”


  கண்களில் மின்னலாய் ஒளி பூச்சு தவிக்கும் தாய் உள்ளத்தில் துடிப்போடு வினவினாள் அலமு.


  நெஞ்சில் நம்பிக்கை பூ ஒன்று மெல்ல மெல்ல வளர தொடங்கியது. 


  நித்திய காலமும் பக்தி நெறியிலே ஆசாரத்தோடு வாழ்க்கையை ஒரு தவம் போல் நடத்தி வரும் குருக்களுக்கு அடுத்தடுத்து பிறந்த இரண்டும் பெண்கள் மூன்றாவதாக பிறந்தவன் விஸ்வம். 


  மூத்தவள் வேதாவை தனியார் கம்பெனி ஒன்றில் வேலை பார்க்கும் சுந்தரராமனுக்கு தன் சக்திக்கு மீறியே செலவு செய்து கல்யாணம் செய்து கொடுத்தார்.  ஆனால் ஓராண்டுக்குள்ளாக கணவன் தன்னை ஒதுக்கி விட்டு வேறொருத்தையோட சுற்றுவதை கண்டு மனம் பொறுக்காமல் பிறந்தகத்திற்கு திரும்பிவிட்டாள் வேதா.


  மகளை வாழ வைக்கும் முயற்சியில் மாப்பிள்ளையிடம் அவர் மன்றாடி தோற்று மனமுடைந்து போனார்.


  அப்படி ஒரு அவமானத்திற்கு பின் தன்  தலைவிதியை நொந்து கொண்டு பெற்றோருக்கு சுமையாக இல்லாமல் அப்பளமிட்டு தன்னால் முடிந்தவரை உதவினால் வேதா.


  இரண்டாவது பெண் ஜானாவின் கல்யாணம்தான் பிரச்சனையாக இருந்தது. நல்ல வரன் ஆனால் அவரால் மஞ்சக் காணியை விற்று கடன் வாங்கினாலும் போதாத இழுப்பறி நிலை. 


  ஒரே பிள்ளை விசுவம் படித்துவிட்டு வேலை தேடி அலைந்து கொண்டிருந்தான். தந்தைக்கு உதவியாய் கோயில் கைக்கரியங்களில் ஒத்தாசை பண்ணினாலும் ஏனோ தந்தையின் பரம்பரைத்  தொழிலில்  ஈடுபட விரும்பவில்லை அவன்.


  கோவில் பூஜை நெய்வேதியம் என்ற காலமெல்லாம் ஆச்சாரமும் பக்தியமாய் நியமங்களை தன் தந்தை கடைப்பிடிக்கும் அன்றாட தரித்திரம் விலகாத விரக்தியில் அவள் உள்ளம் தந்தையின் நிழல் வட்டத்தை விட்டு விலகி வேறு வேலை தேடி கை நிறைய சம்பாதிக்க வேண்டுமென்று கனவு கோலம் பூண்டது.


  அம்மாவுக்கு,  தன் ஒரே பிள்ளையும் தந்தை வழியில் பரம்பரை தொழிலில் இறங்கி பட்டினி கிடக்காமல் சுயமாய் வேறு உத்தியோகம் தேட முனைந்ததில் ஒரு விதத்தில் ஆறுதல் தான். !


  கிடைக்கும் சொற்ப வருமானத்தில் உப்புக்கும் புளிக்கும் கணக்கு பார்த்து பைசா பைசாவாக செலவு செய்யும் அன்றாட தரித்திரம்! மற்றவர்கள் மாதக் கடைசியில் கணக்கு பார்த்தால் இங்கே அன்றாடமும் பற்றாக்குறை பாட்டுதான், பொழுது விடிந்தால் ஒரு வாய் காப்பிக்கும் நீர்த்த மோர் சாதத்திற்குமே இழுபறியாய் அவள் படுகிற பாடு அவளுக்குதானே தெரியும். 


  பெண்கள் அதிகப்படியா ஒரு புடவைக்கும் சினிமாவுக்கும் ஆசைப்பட்டால் கூட நிறைவேற்ற முடியாத இயலாமை கடந்த 25 வருடமாய் மாறுதலே இல்லாத அதே வருமானம்.  “போராடித்தான் பாரேன் உன்னால் என்னை வெல்ல முடியுமானு பயமுறுத்தும் விலைவாசிகள், இவைகளுக்கிடையே அல்லற்படும் வாழ்க்கை. 


  இருட்டு குகைக்குள்ளேயே கிடந்து பார்வையே மங்கி விட்ட நிலையில் வெளிச்சத்திற்கு வர மாட்டோமாவென ஏங்கும் ஏக்கம்.


  இயற்கை தானே? 


  பெண்களின் சுமையை தாங்க மகன் மூலமாவது தன் குடும்பத்திற்கு விடிவு பிறக்கும் என்று அலமு நம்பியது நியாயமே!


  கொல்லையில் நந்தவனம்மாய் பூத்துக் குலுங்கிய மல்லிகை அரும்புகளை கோய்ந்து துரிதகதியில்  சரமாய்த் தொடுத்துக் கொண்டிருந்தாள் வேதா.


நாலு மணிக்குள் தொடுத்து முடித்தால்தான் கோவில் சந்நிதி வாசல் பூக்கடைக்காரரிடம் மொத்தமாக விற்க முடியும். பொழுது சாய்ந்து விட்டால் பூ மீந்து விடுமென்று வாங்க மாட்டார்.


  பரபரப்பும், அவசரமுமாய் தொடுத்து முடிந்த பூச்சரத்தை குடலையில் வைத்து எடுத்துக்கொண்டு கிளம்புகிற சமயம் கச்சேரியாத்து கோமதி மாமி எதிர்பட்டாள்.


  “வாங்கோ மாமி”


  “ஏண்டிம்மா வேதா,  எனக்குக் கொஞ்சம் ஒத்தாசை பண்ணுவியாடி கொழந்தே...’


  சுற்றி வளைக்காமல் மாமி கேட்டது அவளுக்கு பிடித்திருந்தது.


  “சொல்லுங்க மாமி என்ன செய்யணும்?”


   “கொழந்தே! நாளை மறுநாள் ராத்திரி வண்டிக்கு வைதேகி புக்காத்துக்கு புறப்படறா! அன்னைக்கு தான் நாள் நல்லா இருக்காம். புக்காதுக்கு போறவளுக்கு கொடுத்துனுப்ப கொஞ்சம்  பட்சணம், முறுக்கு எல்லாம் பண்ணி முடிச்சிட்டேன் இன்னும் கொஞ்சம் போல பருப்பு பொடி, இட்லி மிளகாய் பொடி, இடிக்கணும் என்னதான் மிக்ஸி அது இதுன்னு இருந்தாலும் கை சுத்தமா கல் உரல்ல இடிக்கிற பொடிக்கு அலாதி ருசி தான். நீ ஒரு கை ஒத்தாசை பண்ணுனியானா தேவலாம். அதான் கைக்காரியத்தை கூட அப்படியே போட்டுட்டு ஓடியாந்தேன்.”


  மாமிக்கு மூச்சு வாங்கியது பாவம் ஸ்தூல சரீரம். 


  “அதுக்கென்ன மாமி திவ்யமா வரேன்.  ஒரு நொடியிலே இந்த புஷ்பத்தை சந்நிதிக் கடையிலே கொடுத்துட்டு வந்துடறேன்.” என்றவாறே வெளியேறவும் தம்பி விஸ்வம் உள்ளே  நுழையவும் சரியாய் இருந்தது. காலையில் ஏதோ இன்டர்வியூ என்ற கிளம்பியவன் இப்போதுதான் திரும்புகிறான்.


  மாமி வீட்டில் வேலைகளை முடித்துவிட்டு அவள் கொடுத்த பத்து ரூபாய் பணத்தோடும் களைப்போடும் வீடு திரும்பிய அவளை எதிர்கொண்டு காத்திருந்தான் தம்பி விசுவம்.


“ ஏண்டா போன காரியம் பழம் தானே?” ஆர்வத்தோடு கேட்டாள் அவள்.


  அவன் முகத்தில் திடீரென ஒரு மாற்றம். 


  “அக்கா வேலை கிடக்கட்டும். ஒரு விஷயம்” என்றான் படபடப்பாய்.


  “என்ன விஸ்வம்”


  “டவுனுக்கு பஸ்ஸிலே போறச்சே அத்திம்பேரை பார்த்தேன்”.


  “அப்படியா”


  “கூட அவளை காணோம். அத்திம்பேர் என்னை கண்டும் காணாத மாதிரி போயிடுவாருன்னு நெனச்சேன். ஆனா நான் இறங்கி நடக்கிறச்சே அவரும் பின்னாடியே வந்து அழைச்சார். அதுக்கப்புறம் எப்படியக்கா நான் வீம்பா போகமுடியும்.?”


  “ஏதேனும் கேட்டாரா ?”அவள் விழிகளில் ஈர பளபளப்பு.


  “கேட்டார் ! வேதா எப்படி இருக்கா, அவளை நானே வந்து பார்க்கிறேன்னு சொல்லுன்னார்.  இந்த வரைக்கும் அவர் திருந்தி இறங்கி வந்தது ஏதோ சொப்பனம் கண்ட மாதிரி இருந்தது நேக்கு”.


  “விஸ்வம்... அவர் உடம்புக்கு ஒன்னுமில்லாம  சௌக்கியமா இருக்காரோன்னோ? அவர் நல்லா இருந்தா போறும்.!” கண்களை துடைத்துக் கொண்டு பெருமூச்சு விட்டாள் வேதா.


  இன்னும் இருள் பிரியாத வைகறைப்பொழுது. 


  கொல்லைக் கிணற்றில் குளிர்ந்த நீரில் குளித்துவிட்டு ஈரம் சொட்டும் மடிவேட்டியையும் துண்டையும் உடுத்திக் கொண்டு நெற்றியில் திருநீறும் குங்குமமும் துலங்க அந்த இருட்டில் கோயிலை நோக்கி நடந்தார் குருக்கள். 


  “பூஜையை முடிச்சுண்டு சுருக்க திரும்பிடுங்கோ.  அதுக்குள்ள தளிகையை முடிச்சுடறேன். உங்களுக்கு பிடிச்ச முருங்கக்காய் சாம்பார் வைக்கறேன்.  வந்து ஒரு விஷயம்..”


  “என்னடி தயக்கம் சொல்லேண்டி”


  “வந்து இன்னைக்கு மனசே சரியில்லே! ராத்திரி முழுக்க ஏதேதோ கெட்ட சொப்பனம் கண்டேன்.  நீங்க சுருக்க வந்துடுங்க...”


  “இத்தனை நாளும் இல்லாத இப்ப நோக்கென்ன  வந்தது?” கலகலவென்று சிரித்தவாறே வாயிற்படியில் கால் வைத்தார் குருக்கள்.


  “ணங்” கென்று  நிலைப்படியில் என்றுமல்லாமல் தலை இடிக்கவே, சற்று நேரம் வாசல் குறட்டில் உட்கார்ந்தார் குருக்கள். “அலமு... தூத்தம் கொண்டா!” தண்ணீரை ரெண்டு வாய் குடித்துவிட்டுப் புறப்பட்டார்.


  அவள் படியிறங்கி செல்லும் வரை இமைக்காமல் வெறித்துக் கொண்டு நின்ற அலமு  கொல்லைப்புறம் விரைந்து மறுபடியும் வாளி வாளியாய்  ஜலம் இரைத்து தலையில் கொட்டிக் கொண்டாள்.


  ரவிக்கையும் புடவையும் சொட்ட சொட்ட அப்படியே பூஜையறையில் கரங்குவித்து  கண்மூடி நின்றாள்.


  பூஜை அறையில் இருந்து அலமேலுவின் குரல் குறைந்து இழைந்து வந்தது. 


“மங்கள ரூபிணி மதியனி... சூலனி மன்மத பாணியாளே! சங்கடம் நீங்கிட சடுதியில் வந்திடும் சங்கரி சௌந்தரியே....!” 


  கிணற்றிலிருந்து முருங்கைக்காய் பறித்து வந்த ஜானா தாயின் குரலில் இருந்த தழதழப்பை கண்டு விக்கித்து நின்றாள்.


  அவள் மேனி சிலிர்த்தது. 


  “அக்கா என்ன இது ? அம்மா சொல்ற தோத்திரத்தை கவனிச்சியாடி, துக்க நிவாரண  அஷ்டகத்தையான்னா சொல்றா?”


  “ஆமாண்டி காலம்பற எழுந்திருக்கச்சயே அம்மா ஒரு மாதிரியான்னா இருந்தா?”


  சகோதரிகள் இருவரும் திகிலோடு ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டனர். 


  பூஜையை முடித்துக் கொண்டு திரும்பிய அலமுவின் முகம் ஏனோ இறுகியிருந்தது.


  “வேதா... கெட்ட சொப்பனம் கண்டேன்.  மனசு என்னவோ பண்றதுடி.  அதான் துக்க நிவாரண அஷ்டகத்தை சொன்னேன் கடவுள் இருக்கார்.”


  தனக்குத்தானே ஆறுதல் கூறிக் கொண்டாள் அலமு. 


  கோயில் கர்ப்ப கிரகத்தை நெருங்கும்போது தூக்கி வாரி போட்டது. 


ஏற்கனவே கதவை திறக்கப்பட்டு இருந்தது உள்ளே ஆட்களின் நடமாட்டம்! 


சாவி அவர் கையில் இருக்கும் போது இது எப்படி? 


அவரால் மேற்கொண்டு யோசிக்க முடியவில்லை. 


இருளோடு இருளாக பதுங்கி சென்று கண் இமைக்கும் நொடிப்பொழுதில் கர்ப்ப கிரகத்தின் திறந்திருந்த கதவை இழுத்து மூடி அதில் வாய் திறந்து தொங்கிக் கொண்டிருந்த பெரிய பூட்டை கையில் இருந்த சாவியால் டக்கென்று பூட்டி முடிக்கும் தருணம்....


பின்புறம் காவலிருந்த கொள்ளையரின் கையால் மின்னல் வேகத்தில் அவரை தாக்க குருக்கள் அலற அந்த வைகறை பொழுதில் அந்த குரலைக் கேட்டு கிராமம் மொத்தமும் ஓடி வர ஏக களாபரம் ஒரு சில நிமிடங்களில் நிகழ்ந்துவிட்டது. 


  அம்பாள் நகையை கொள்ளையிட்டு கொண்டிருந்த கொள்ளை கூட்டம் எலிப் பொறியில் அகப்பட்ட எலிகளாய் வகையாய் மாட்டிக் கொண்டது. 


போலீசார் மண்டகப் பூசையோடு அவர்களை இழுத்துச் சென்றனர். 


குருக்களுக்கு தலையிலும் கையிலும் ஏற்பட்ட காயங்களின் வேதனை கூட பெரிதாக தெரியவில்லை ஊராரின் பாராட்டும் புகழுரையும் அவரை தலை நிமிர்ந்து நடக்க வைத்தன. 


  சில வாரங்களில் அவரது ரத்த காயங்கள் ஆறிய அதே நேரம் அரசாங்கத்திலிருந்து அவருக்கு பரிசு கிடைத்திருக்கிறது என்ற நற்செய்தி அவரை தேடி வந்தது. 


  உயிரையும் பொருட்படுத்தாமல் சமயோசித புத்தியுடன் கொள்ளையர்களை பிடித்து கொடுத்த அவரது செயலை பாராட்டி மேல்மட்ட காவல்துறை அதிகாரியவர்கள் அரசாங்கம் அளித்த இருபதாயிரம் ரூபாய்கான காசோலையை குருக்களிடம்  ஊர் மக்கள் முன்னிலையில் கொடுத்து அவரை பாராட்டி பேசினார். 


அலமுவுக்கு முகமே தாமரையாய் மலர்ந்தது. 


  ஜானாவின் கல்யாணத்திற்கு துண்டு விழுந்த தொகையை இந்த பணத்திலிருந்து எடுத்து அவள் திருமணம் ஜாம் ஜாமென்று நடந்தது. 


  விஸ்வத்தின் வேலைக்காக டெபாசிட் தொகை கொடுக்கப்பட்டு இன்று அவனும் அரசாங்க உத்தியோகத்தில் அமர்ந்து விட்டான். 


  மூத்தவள் வேதாவை அவள் கணவன் வந்து அழைத்து போய்விட்டார். 


ஆக.....


அந்தக் குடும்பத்தைப் பொறுத்தவரை பொழுது மட்டும் விடியவில்லை பிரச்சனைகளுக்கும் விடிவு ஏற்பட்டு விட்டது. 


நம்பிக்கைதானே வாழ்க்கை? 

எழுதியவர்

கே. ஜெய்புன்னிசா.

    ராஜம் – பிப்ரவரி 1989 வெளிவந்தது.

                            **********


  


Sunday, July 5, 2026

தணல் - எழுதியவர் மறைந்த எழுத்தாளர் கே. ஜெய்புன்னிசா

July 05, 2026 0
 தணல் - எழுதியவர்  மறைந்த எழுத்தாளர்  கே. ஜெய்புன்னிசா


 இருள் பிரியாத அந்த வைகறை பொழுதில் எழுந்திருக்க மனமில்லாமல் படுக்கையில் புரண்டு கொண்டிருந்தாள் ஜானகி. 


  “ம்மா....” என்று ரீங்கார தோணியில் குரல் கொடுத்தது கொட்டிலில் கட்டி இருந்த பசு.  அடுத்து இருந்த ராமர் கோவில் மடத்திலிருந்து பஜனை கோஷ்டி ஒன்று வைகறைப்பொழுதின் நாதத்தோடு சங்கும் ஜாலராகவும் முழங்க பஜனை பாடிக் கொண்டு சென்றது. 


  மார்கழி மாத குளிர் ஊசி முனையாய் உடம்பை துடைப்பது கூட பொருட்படுத்தாமல் இருள் மண்டி கடந்த அந்த நேரத்தில் கை விளக்கின் துணையோடு வாசல் தெளித்து பட்டுப்பாய் விரித்தார் போல் வாசல் முகப்பில் பெரிதாக கோலம் போட்டுக் கொண்டிருந்தால் எதிர் வீட்டு பார்வதி. 


  கொல்லைப் புறத்தில் வேலைக்காரி தனம் பாத்திரங்களை உருட்டிக் கொண்டிருந்தாள்.  ராமர் கோவில் ஒலி பெருக்கியில் இருந்து இனிமையாய் தவழ்ந்து வந்த திருப்பாவையின் புனித நாதத்தை அமுக்குவது போல் அந்த ஓசை அபஸ்வரமாய் ஒலித்தது.


  மாடியில்  தம்பி மூர்த்தி ஆங்கில “பொயரி”யை உருப்போடும் ஓசை! சமையலறையில் அன்னம்மா கிழவி ஸ்டவ்வை பற்ற வைத்ததால் உண்டான “கிர்” ரென்ற சப்தம், கிணற்றடியில் பச்சைத் தண்ணீரை வாளி  வாளியாய் அள்ளிக் கொட்டிக்கொள்ளும் அம்மாவின் அவசரம்.


  காரியங்கள் தொடங்கி விட்டன.  இனி அது ஓய்ந்து அடங்கும் நேரம் எப்போதோ? 


  ஜானாவுக்கு இன்னும் எழுந்திருக்க மனமில்லை. எழுந்து என்னத்த சாதிப்பது? எப்போதும் ஒரே மாதிரி அம்மாவுக்கு ஒத்தாசை செய்வதும், சமையல் பாட்டிக்கு காய்கறி அரிந்து கொடுப்பதும், தண்ணீரை இறைத்துக் கொட்டுவதும், சாப்பாட்டுக் கடையை ஒழுங்குபடுத்துவதும்... சே!


  எல்லாம் மற்றவர்களுக்காக தான்.  அவளுக்கென்று ஏதாவது உண்டா? இந்த வீட்டில் வேண்டாத விருந்தாளி தான் அவள். 


  “அடி ஜானா, .இன்னும் என்னடி தூக்கம்? காலங் காத்தாலே எழுந்திருக்காமே பீடை பிடிச்ச மாதிரி இன்னும் தூங்கிட்டு இருக்கியேடி? வந்த வழி தான் சரியில்லே, இருக்கிறதாவது ஒழுங்கா இருக்க வேண்டாமோ? பொழுது விடிஞ்சும் இன்னும் படுத்துண்டு இருக்கியேடி, உனக்கு எப்படியடி விடிவு பொறக்கும்?”  ஈரப் புடவையை உடம்பில் சுற்றியபடி  போகிற போக்கில் கடுகு பொரிவது போல் பொரிந்து விட்டு போய்விட்டாள் அம்மா.


  அவளை சொல்லி குற்றமில்லை. 


  காலா காலத்தில் கரை சேர வேண்டிய மகள் நாலு பேரு பரிதாபப்படும்படியான நிலையில் வீட்டில் முடங்கி கிடப்பது பார்த்து பார்த்து அலுத்து கசந்து விட்ட விரக்தி.


  பாகீரதியின்  வயிற்றில் பிறந்த ஆறில் மூத்தவன் ஸ்ரீராம் வெளிநாட்டு தூதரகத்தில் உயர்ந்த பதவியில் கை நிறைய சம்பளம் வாங்குகிறான். அடுத்த ஐந்தும் பெண்கள்.  கடைசி தான் ஜானகி.  நான்கு பெண்களுக்கும் கல்யாணம் ஆகிவிட்டது.  பெரியவள் பாக்கியலட்சுமி, டெல்லியில் வாழ்க்கை பட்டிருக்கிறாள். அடுத்தவள் கோமதி திருச்சியில் ஹை ஸ்கூல் ஆசிரியருக்கும், மூன்றாமவள் சுமதி துர்காப்பூரில் இன்ஜினியராக இருக்கும் ராமநாதனுக்கும்,  நான்காமவள் உள்ளூரிலேயே அத்தை பிள்ளையான பெட்ரோல் இன்ஸ்பெக்டருக்கும் வாழ்க்கைப்பட்டு அமோகமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.


  கடைசியாக பிறந்த ஜானகிக்கு இன்னும் திருமணமாகவில்லை. அந்த வீட்டில் எல்லோருமே நல்ல அழகு.  பரம்பரையில் யாருமே கருப்பு இல்லை.  துலக்கி விட்ட செப்பு கலசம் போல் நல்ல சிவப்பு.  ஆனால் கடைக்குட்டி எங்கிருந்து வந்தாலோ ஒடிசிலான உடம்பும், கருப்புமாய் முகத்தில் ஒரு தேஜஸ் கிடையாது, குடும்பத்துக்கு ஒரு திருஷ்டி பரிகாரமா இருந்து இறந்து போன தன் நாத்தனாரை அவள் கொண்டிருப்பதாக அவள் அம்மா அவளை கரித்து கொட்டுவாள்.


  இதோடு இருந்தால் பரவாயில்லையே! 


  அவள் உயிரை வாங்காமல் சித்திரவதைப்படுத்தும் அந்தப் பாழாய் போன வலிப்பு நோய் வேறு. அது மட்டும் இல்லை என்றால் வரதட்சனை கொஞ்சம் கூட போனாலும் இந்நேரம் அவளும் தன் தமக்கைகளை போல்  கணவனோடு மாங்கல்யம் குலுங்க வாழ்ந்து கொண்டிருப்பாள்.


  அவளைப் பரிசோதித்த டாக்டர்கள் அனைவரும் ஏக மனதாக சொன்னது கல்யாணமாகிவிட்டால் இந்த நோய் மறைய வழி உண்டு என்பதுதான். ஆனால் அவளை யாரும் திருமணம் பண்ணிக் கொள்ள முன்வரவில்லை. 


  பணத்துக்காகவும் குலத்துக்காகவும் அவளைப் பார்த்து போகும்  மாப்பிள்ளைகள் சம்மதம் தெரிவித்து விட்டுப் போவார்கள்.  ஆனால் அவளுக்கு இருக்கிற அந்த நோய் பற்றிய வதந்தி எப்படியோ பரவி நிச்சயதார்த்தம் நின்றுவிடும்.


  தனக்கு கல்யாணமாகவில்லையே என்று ஜானகி வருந்துவதை விட ., அந்தப் பெரிய வீட்டில் பெற்ற தாய்க்கே பிடிக்காத, வேண்டாத சுமையாய் இருந்து தொலைகிறோமே என்பதுதான் அவளுடைய ஆற்றாமை. 


  “கழிசடை கழிசடை” ...  என்று அவளை ஒதுக்கி ஒதுக்கியே படிக்க வைக்கவில்லை.  இவள் படித்து என்னத்தைச் சாதிக்கப் போகிறாள் என்கிற அவநம்பிக்கை.  ஏழாம் வகுப்போடு படிப்புக்கு முற்றுப்புள்ளி விழுந்தது. வடக்கேயிருந்து வந்து தங்கும் தமைக்கைமார், அவர்களுடைய குழந்தைகளுக்கும் ஊழியம் செய்யவே மாளாது.  வேட்டகம் புறப்படறேன் என்று ஒரு மாதத்துக்கு முன்பிருந்தே வடாம், அப்பளம், மோர் மிளகாய், பருப்பு பொடி, பச்சணம் என்று “கொஞ்சம் ஒத்தாசி செய்யடி ஜானா” என்று நைச்சியமாக பேசி பேசியே அவளை பிழிந்து  எடுப்பார்கள்.


  வீட்டில் தங்கி படிக்கும் ஒன்றுவிட்ட தம்பி மூர்த்திக்கும் அம்மாவுக்கும் வடக்கேயிருந்து துணிமணிகள் வாங்கி வருவாள் பாக்கியம். 


  “ஏண்டி,... எனக்கொண்ணும் கொண்டு வரலையா?” ஏக்கமும் எதிர்பார்ப்புமாக வினவும் அவளுக்கு கிடைக்கும் பதில் “உனக்கு எதுக்குடி இது?! வெளியே போய் வரவாளுக்குத்தான் இதெல்லாம் பாந்தமாயிருக்கும்.  வீட்டிலே கரியண்டை வேலை செய்றவளுக்கு தாங்குமா இதெல்லாம்? அதான் வாங்கியாரலை. கோவிச்சுக்காதடி ஜானா! அடுத்த முறை வரச்சே இதே போல துணி வாங்கியாறேன். “ஏண்டி ஜானா! இப்படி இளச்சுட்டே? உடம்பு துரும்பாய் போயிடுச்சேடி ஜானா, சும்மாத்தானே இருக்கே!  இந்தப் புடவையைக் கொஞ்சம் தோய்ச்சுப் போடறியாடி யம்மா” அவள் மோவாயை தடவுவாள் மூத்தவள்.


  எப்படித்தான் சுற்றிச் சுழன்றாலும் சக்கரத்துக்குள் இருக்கும் இருசு சுற்றினால் தான் சக்கரம் சுழலும் என்கிற ரீதியில் எதையெதையோ பேசினாலும் கடைசியில் அவளை பிழிந்து எடுப்பதில் தான் அக்காமார்களுக்கும் திருப்தி!.  வேலைக்காரி துவைக்க மாட்டாள் அவள் தொட்டால் “விழுப்பு”  “மடி” என்று ஒதுக்கி விடுவார்கள். 


  வரன் தேடி தேடி கலைத்துப் போய் விட்டனர் பெற்றோர். 


  ஜானகி....


அவள் என்றைக்கோ உணர்ச்சிகளை இழந்த வெறும் ஜடமாகிவிட்டாள்.  இதயம் வற்றிவிட்ட பின் உணர்ச்சிகளுக்கு இடமேது?


ஒருநாள்....


“ஏன்னா!  இப்படி செய்தாலென்ன? நாம நம்ம தரத்துக்கு ஏத்த மாதிரி பார்த்தா இந்த ஜென்மத்திலே  ஜானாவுக்கு கல்யாணமாகாது. குறையுள்ள பொண்ணுக்கு நெறஞ்ச மாப்பிள்ளை கிடைப்பானா? இதோ பாருங்க! பேசாம வேதம் மாமி பிள்ளை ராமுவுக்கே நம்ம ஜானாவை முடிச்சிட்டா என்ன?”


  “பாகீரதி நீ என்ன சொல்கிறே? வேதம் மாமியின் பிள்ளைக்கா! ஐயோ அவன் உருப்படாத பிள்ளைன்னு பேர் எடுத்தவனாச்சே! எங்கோ வெளியூர்ல வக்கீல் குமாஸ்தாவா பிழைச்சிட்டு இருக்கிறே அந்தப் பையனுக்கா ஜானாவை பண்ணலங்கிறே?” அதிர்ந்தார் அவர்.


  “அந்தப் பிள்ளை  உருப்படாதவனோ, உருப்படறவனோ எப்படியோ இருக்கட்டும்.  ஆனா அவன் ஒரு ஆண் பிள்ளை ஜானா கழுத்துல மூணு முடிச்சு போடுறவனா இருந்தா போறும். உடனே போய் வேதம் மாமியிடம் இது பத்தி பேசி முடிச்சுடுங்கோ”


  “பாகீரதி,  நம் ஆத்துக்கு வாசற்புறமா வர கூசிண்டு பின்புறமா வந்து ஒண்டி நிற்கிற வேதம் மாமியோட ஆத்துக்கு நானே நேரிலே  போறதா?”


  “பெண்ணைப் பெத்தவா குனிஞ்சுண்டு தான் போகணும். அதிலேயும் நிலைபடி குட்டையாயிருந்தா கேட்கவே வேண்டாம், புறப்படுங்க.”


  நெஞ்சை அழுத்திக்கொண்டிருந்த பெரியதொரு பாரம் நீங்கிய நிம்மதிப் பெருமூச்சு அவளிடமிருந்து வெளிப்பட்டது.


  மூலையில் நத்தையாய் சுருண்டு முடங்கிக்கிடக்கும் தன் மாமியாரின்  உறக்கம் கெட்டு விடக்கூடாதே என்பதற்காக முட்டை விளக்கின் பின்புறம் அட்டையால் தடுத்தபடி அப்பளம் உருட்டி கொண்டிருந்தாள் ஜானகி. 


  தூக்கம் கண்களைச் சுழற்றியனாலும் அதை பொருட்படுத்தாதவாறு பரபரப்பாக வேளையில் ஈடுபட்டிருந்தாள் அவள்.  அந்த எட்டடிக்  குச்சில் அவளை சுற்றிலும் ஈரம் உலராத அப்பளங்கள் பரப்பிக் கிடந்தன.


  ஆயிற்று, அவளுக்கும் கல்யாணமாகி ஆண்டொன்று ஓடி விட்டது.  அவள் கணவன் ராம்முடு திருமணமான இரண்டு மாதங்கள் வரை ஒழுங்காக இருந்தான்.  பிறகு பழைய கதையாய் வீட்டில் கால் தரிக்காமல் வெளியூர் போய் விட்டான்.  தான் உண்டு உடுத்தியது போக எப்போதாவது பத்து, இருபது என்று அனுப்புவான் அதோடு சரி. 


  பெரிய இடத்தில் பிறந்து வளர்ந்த ஜானகி வரட்டு கௌரவம் பார்க்காமல் தன் விதிப்பயனை தான் அனுபவிக்க வேண்டும் என்று மாமியோடு தானும் உழைத்தாள். வேதம் மாமிக்கும் இப்போது உடம்பு முடியவில்லை.  எல்லா வேலைகளையும் ஒன்றியாகவே செய்து அந்த குடும்பத்தைப் பராமரிக்க தொடங்கினாள். 


  புரண்டு படுத்த வேதம் மாமி  விளக்கு வெளிச்சத்தை கண்டு திடுக்கிட்டாள். 


  “ஜானகி! என்னம்மா இது? இன்னும் நீ தூங்கல? படுத்து தூங்கும்மா,  எவ்வளவோ அமோகமா இருக்க வேண்டிய நீ, இந்த வீட்டுக்கு வந்து என்னோட சேர்ந்து நீயும் கஷ்டப்படறேயடியம்மா.” வேதனை கசிய மருமகளின் முகத்தை தடவி கொடுத்தது வேதம் மாமியின் கரம். 


  புரசைவாக்கத்தில் நெருக்கடி இல்லாத தெரு திருப்பத்தில் வேகத்தோடு வந்த கார் குலுக்களோடு நின்றது. 


  “ஏன்னா, அது நம்ம ஜானா மாதிரியில்லே? சித்தெ இருங்கோ.” காருக்குள்ளியிருந்த  பாகீரதி பதைப்போடு  எழுந்து வந்தாள். 


  கையில் பெரியதொரு பையோடு காரை  கடந்து போன அந்த பெண்ணை உற்று கவனித்தாள் பாகீரதி.


  “ஜானா! “


  அவள் ஜானகியேதான், திரும்பிப் பார்த்தவள் தாயைக் கண்டதும் உவகையோடு அருகில் வந்தாள்.


  மகளை ஏற இறங்கப் பார்த்தாள் அன்னை.  சாதாரண வாயில் புடவை, கைகளில் கண்ணாடி வளையல்கள், தாளிச் சரடோடு  உறவாடிக் கொண்டிருந்த மெல்லிய பொன் சங்கிலி, மெலிந்து இளைத்த மேனியிலும் ஒரு புது மெருகு. கன்னங்களில் பூசினாற்போல் சதைப்பற்று. 


  பாகீரதியின்  பார்வை சட்டென்று மகளின் இடுப்பருகே தாவிற்று. அதன் பொருளை உணர்ந்து கொண்டாற்போல் ஜானகியின் முகத்தில் நாணம் குமிழிட்டது . 


  “என்னடி, அப்படியா சமாச்சாரம்? ஏண்டி இத்தனை நாளும் என் கிட்ட சொல்லலே இதே ஊர்ல இருந்துட்டு முகத்தை காட்டாமல் இருக்கியேடி ஜானா.  உடம்பு இளைத்து போய் இப்படி இருக்கியேடிம்மா!  இந்த நேரத்துல உடம்பு நல்லா பார்த்துக்கணும் கார்ல ஏறு ஜானா! வீட்டுக்கு போகலாம்”.


  “இல்லம்மா, இப்ப நான் வர்றதுக்கு இல்ல அவரண்டே கேட்காம கிளம்ப மாட்டேன்”


“  என்னடி பெரிய அவரு, ராமுடு தானே? சொல்லிண்டா போச்சு வாடி!”


  “அம்மா என்ன சொன்னே நீ? பெரிய அவருன்னா? உன்னை பொறுத்த மட்டிலே டாக்டரும் இன்ஜினியருமா இருந்தாத்தான் நீ மருமகனா ஏத்துப்ப போலிருக்கு.  உன் பார்வையிலே அவர் அப்பளம் இடும் வேதம் மாமியோட உருப்படாத பிள்ளையாயிருக்கலாம்.  ஆனா.. எனக்கோ அவர் தாலி கட்டின புருஷன்.  நாலு பெண்களையும் துருவி துருவி பார்த்து நல்ல இடமா கொடுத்தே,  ஆனால்,  நான் கழிசடை, நோயாளின்னு ஒதுக்கி ஒதுக்கியே நாலு வேலைக்காரர்களுக்கு மத்தியிலே என்னையும் அஞ்சாவது வேலைக்காரியா நடத்தினே. சனி ஓழிஞ்சா சரின்னு நிலையான வேலையோ வருமானமோ இல்லாத ஒருத்தருக்கு தள்ளிட்டு இப்போ ஏளனமா பேசுற!”


  “இதோ பாருமா ! நான் கொடுத்து வச்சது அவ்வளவுதான்னு பரிபூரணமா இந்த வாழ்க்கையே எத்துண்டு இரவு பகலா உழைச்சு அந்த குடும்பத்தை நடத்தினேன். உருப்படாதவர்ன்னு பேரெடுத்த  என் கணவரைக்கூட என் பொறுமையாலே மாத்திட்டேன். வாழ்க்கையில  பிடிப்பில்லாம ஊர் ஊரா சுத்திண்டிருந்த அவருக்கும் நிலையானதோர் தொழிலை அமைச்சிட்டேன். இரவு பகலா கண் முழிச்சு அப்பளம் உருட்டியும், வற்றல் பிழிஞ்சும், ஊறுகாய் தயாரித்தும் நாலு பேருக்கு தெரியாம மூடி மூடி வேற்று மனிதர்கள் இருக்கிற இடத்தில் நாலு பெரிய இடங்களில் வாடிக்கையாய் போட்டு பணம் சேர்த்து டைப்மிஷின் வாங்கி செஷன் கோர்ட் ஏரியாவில் ஜாப் டைப்பிஸ்ட்டாக அவரை சுயமா சம்பாதிக்க வழி செஞ்சிட்டேன்.”


“நீ நினைச்ச மாதிரி நான் கழிசடையாய் போகலே, இப்போது சௌக்கியமாகத் தான் இருக்கேன்.”


  “உண்மையைச் சொல்லப்போனா எனக்கு முன்னே மாதிரி இப்போ அந்த “வலிப்பும்” வரதில்லே.  என் உடம்பை தேத்ததற்காக நான் அங்கே வர வேண்டியதில்லை. ஏன் ? தலைப் பிரசவத்துக்குக் கூட அங்கே வர்றதில்லைன்னு முடிவு பண்ணிட்டேன்”.


  “அம்மா ஒரு சின்னத் தணல்  உன் காலை சுட்டுடுத்தேன்னு நீ அதை தெருவிலே  விட்டெறிஞ்சே. ஆனா...அதை ஊதி ஊதி அந்த ஜ்வாலையிலிருந்து விளக்கேத்தி ஓர் இருண்ட வீட்டுக்கு வெளிச்சம் கொடுக்க முடியும்ங்கிறதை நான் நிரூபிச்சிட்டேன்.  நான் வர்றேன்.”


  நிதானமாக, ஆனால் அழுத்தத்தோடு பேசி முடித்துவிட்டு கூட்டத்தில் சென்று மறையும் மகளைக் கண்டு கண்ணீர் வடித்தாள் பாகீரதி.


  அது ஆனந்த கண்ணீர்.

 ஆனந்த விகடன் 10.01.1971 ல் வெளிவந்தது.)


           எழுதியவர்

மறைந்த எழுத்தாளர்

கே. ஜெய்புன்னிசா.


Manidha Dharmangal -Short Film

July 05, 2026 0
Manidha Dharmangal -Short Film

Saturday, June 14, 2025

Voilet Kanavu - Vivanth | Reina | Yaar Kannan | Arvindraj and others

June 14, 2025 0
Voilet Kanavu - Vivanth | Reina | Yaar Kannan | Arvindraj and others

Producer - Babu Thooyavan under the banner Appu Movies Distributor M4 International..

Trailer on Youtube Click the Poster!!





Thursday, May 18, 2023

APPUMOVIES BABUTHOOYAVAN

May 18, 2023 0
APPUMOVIES BABUTHOOYAVAN

Jenni | Tamil Movie Trailer | Appu Movies

May 18, 2023 0
Jenni | Tamil Movie Trailer | Appu Movies

BABU THOOYAVAN

May 18, 2023 0
BABU THOOYAVAN

 Babu Thooyavan is a Producer, Director, and Writer from India. Age 44 years (01 January 1979) born in Chennai, Tamil Nadu, India. So far Babu Thooyavan has worked in the Kollywood entertainment industry and his artwork has been released in Tamil language movies.

Director Biography:Babu Thooyavan is an Indian film artist, who has worked predominantly in the Tamil movie industry. Babu Thooyavan has worked in popular movies like Katham Katham. Babu Thooyavan's previous film to hit theatres was Katham Katham in 2015